’எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன்’’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வொஷிங்டன் அருகே உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று குணமடைந்துவிட்டதா? இல்லையா? என்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில் 4 நாட்கள் சிகிச்சையின் பின்னர் நேற்று முன்தினம் அவா் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். இது கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலை கொடுக்க நேரிடும்.
எனக்குக் கிடைத்த சிகிச்சை உங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். அனைத்து கொரோனா சிகிச்சைகளும் இலவசமாக்கப்படும். இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் எனவும் ட்ரம்ப் அதில் மேலும் தெரிவித்தார்.